கதை இதுதான்:
ஏன் வாழ்கிறோம் என்றே தெரியாமல் இருக்கும் ஒருவன் தானாக முன்வந்து ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவமனையில் சேருகிறான். அங்கே உள்ள மருத்துவர்கள் கூட அவன் பிரச்சினையை சரியாக கேட்பதில்லை. தன்னோடு இருக்கும் சக நோயாளிகளிடம் பழகும்பொது தான் தான் மற்றவர்களுக்கு உதவி செய்வதின் மூலமாக தன் வாழ்க்கையை சிறப்பாக கொண்டு செல்ல முடியும் என்று அறிகிறான். மருத்துவமனையில் இருந்து வெளியேறி ஒரு மருத்துவக் கல்லூரியில் சேருகிறான்.நோயாளிகளுக்கு தேவை மருந்து மட்டும் அல்ல. அன்பும் தான் என்று சொல்கிறான். இவனுடைய செய்கைகள் முதலில் பலருக்கு பிடிக்காமல் போனாலும் நாளாக ஆக இவனை சுற்றி ஒரு கூட்டம் கூடுகிறது. தன் மருத்துவக் கல்லூரியில் உள்ள பல தடைகளால் தன்னால் நோயாளிகளுக்கு சரியாக உதவ முடியாததை உணர்ந்து தானே ஒரு மருத்துவமனை ஆரம்பிக்கிறான். (இதை செய்யும் பொது அவன் மருத்துவம் முடித்திருக்க வில்லை). எல்லோரும் அவனிடம் அன்பாக பழகும் பொது இருவர் மட்டும் அவனை வெறுக்கிறார்கள். ஒன்று. அவன் ரூம் மேட். இன்னொன்று அவன் கல்லூரி முதல்வர்.
ஒரு நிலையில் மனநிலை தவறிய நோயாளி ஒருவன், இவனுடைய காதலியை கொன்று தானும் தற்கொலை செய்து கொள்கிறான். அதற்கு தான்தான் காரணம் என ஆடம்ஸ் நினைத்து கல்லூரியையும் படிப்பையும் விட்டுச்செல்ல நினைக்கிறான். அப்போது அவனிடம் வரும் அவன் ரூம் மேட் ஒரு நோயாளி சாப்பிட மறுப்பதாகவும் என்ன முயன்றும் அவர் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிப்பதாக சொல்கிறான். மருத்துவம் படித்த தன்னால் நோயாளியின் மனதை படிக்க முடியவில்லை என்று புலம்புகிறான். ஆடம்ஸ் மட்டுமே தனக்கு உதவ முடியும் என்று சொல்கிறான். தான் கல்லூரியை விட்டு செல்வதாகவும் இனி யாரையும் தொந்தரவு செய்வதில்லை என்றும் சொல்லிவிட்டு அங்கிருந்து ஆடம்ஸ் செல்கிறான். தானும் தன் காதலியும் சென்ற இடத்திற்கு செல்லும் ஆடம்ஸ் அங்கே ஒரு ஒரு பட்டாம்பூச்சியை பார்த்தவுடன் தன் காதலி சொன்னது நினைவிற்கு வர மீண்டும் கல்லூரி செல்கிறான். அங்கே அந்த நோயாளியை சந்திக்கிறான். அந்த நோயாளிக்கு நூடுல்ஸ் என்றால் ரொம்பப் பிடிக்கும் என்றும் முழுக்க நூடுல்ஸால் நிரப்பப்பட்ட ஒரு நீச்சல் குளத்தில் தான் விளையாடுமாறு அடிக்கடி கனவு காணுவதாகவும் அவர் ஏற்கனவே ஆடம்ஸிடம் சொல்லியிருப்பார். எனவே அதே போல் ஒரு நீச்சல் குளம் தயார் செய்து அவரை கொண்டு விட்டு அவரை சாப்பிட செய்வான். அதன் பிறகு தன்னை கல்லூரியில் இருந்து நீக்கியதாக கல்லூரி முதல்வர் சொல்ல அவரை எதிர்த்து மெடிக்கல் கவுன்சில்லில் முறையீடு செய்து தன் படிப்பை முடிப்பான்.
ஆரம்பத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவமனையில் இருக்கும் போது அங்கே ஒரு பெரிய கணித மேதையை சந்திக்கிறான். அவரும் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறார். அவர் எல்லோரிடமும் நான்கு விரல்களை காட்டி இது எத்தனை என்று கேட்பார். ஆடம்ஸிடமும் அதே கேள்வியை கேட்பார். நான்கு என்று சரியாக ஆடம்ஸ் பதில் சொல்ல அவனை முட்டாள் என்று சொல்லி விட்டு செல்வார். பிறகு அவர் அறைக்கு சென்று விடையை கேட்பான் ஆடம்ஸ். நான்கு விரல்களை காட்டும் அவர் இந்த விரல்களை பார்த்தால் உனக்கு நான்குதான் தெரியும். விரல்களை பார்க்காதே. விரல்களுக்கு அப்பால் பார். இப்போது எத்தனை தெரிகிறது? என்பார். விரல்களில் உள்ள இடைவெளி வழியாக விரல்களுக்கு பின்னால் உள்ளவற்றை பார்க்கும் ஆடம்ஸ் கண்களுக்கு எட்டு விரல்கள் தெரிகின்றன. எட்டு என்று சொல்வான். இதே போல் தான் நம் வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளும். பிரச்சினைகளை நாம் உற்று நோக்கினால் நமக்கு அதற்கான ஒழுங்கான தீர்வு கிடைக்காது. பிரச்சினைகளுக்கு அப்பால் பார். அப்போது தான் சரியான தீர்வு கிடைக்கும் என்று சொல்வார். இது போல் படத்தில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

படத்தில் இருப்பவர் தான் உண்மையான Patch Adams.
உண்மையான Patch Adams பற்றி தெரிந்து கொள்ள >>இங்கே<< செல்லவும்.

