Tuesday, March 10, 2009

Police Diary - 1

இந்த ஏரியாவில் நான் எஸ்.ஐ.யாக பொறுப்பேற்றதில் இருந்தே பிரச்சினை தான். கொஞ்சம் கூட சும்மா இருக்க விடுவதில்லை. ஒரே கொலை, கொள்ளை. சே.. இன்று காலை கூட ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தாள். அதுவும் என் வீட்டு தெரு கடைசியில்.. இப்பொழுது கூட விசாரணைக்காகத்தான் ஸ்பாட்டுக்கு வந்திருக்கிறேன்.
கழுத்து அறுக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தாள். சற்று அழகாகவே இருந்தாள். பணத்திற்காக கொலை செய்யப்படவில்லை என்பது அவள் காதில் இருந்த தங்கத் தோட்டில் இருந்தே தெரிந்தது. உடை அங்கங்கே சற்று கிழிந்திருந்ததை வைத்து அவளை யாரோ கற்பழிக்க முற்பட்டு இறுதியில் கொலை செய்திருக்கிறார்கள் என்று யார் வேண்டுமென்றாலும் கணித்து சொல்லி விடுவார்கள். தடயம் எதுவும் கிடைக்கிறதா என்று சோதனை செய்தாயிற்று. ஒரு சிறு தடயம் கூட அகப்படவில்லை. "கொலைகாரன் ரொம்ப லக்கி" ஏட்டு சொன்னார். "அப்படியா? பார்க்கலாம்" நான் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். கொலையை நேரில் பார்த்தவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. எப்படியும் நள்ளிரவு தாண்டி தான் நடந்திருக்கும். சட்டென்று ஒரு பொறி தட்டியது. மாரிமுத்து தெருக் கோடியில் தானே பெட்டிக் கடை வைத்திருக்கிறான். இரவு ஒரு மணிக்கு தான் கடையை பூட்டுவான். தூங்குவதும் அங்கேயே தான். அவன் கொலையை பார்த்திருக்கக்கூடும். அவன் அங்கே இல்லை. இது இன்னும் சந்தேகத்தை வலுப்படுத்தியது. ஏட்டும் இதை கவனித்து விட்டார். "அவனே ஒரு வேளை கொலைகாரனாக இருக்கலாம்" ஏட்டு சொன்னார். அவன் தன் தங்கையின் வீட்டில் தான் இருப்பான். உடனே சென்றால் பிடித்து விடலாம். நேரே அங்கே சென்றேன். ஏட்டு கூட வருகிறேன் என்று சொன்னார். "கொலைகாரப் பயல். ஜாக்கிரதையாக இருக்கணும்" ஏட்டு சொன்னார். "இன்னும் விசாரணை முடியலை. அவன் சாட்சியாகவும் இருக்கலாம். அதற்குள் கொலைகாரன் என்று சொல்லாதீர்கள்" என்று சொல்லிவிட்டு ஏட்டுக்கு வேறு வேலை கொடுத்து விட்டு நான் மட்டும் அவனை தேடி அங்கிருந்து கிளம்பினேன்.
அந்த வீடு ஒரு சந்தின் கடைசியில் இருந்தது. உள்ளே சென்றேன். என்னை பார்த்ததும் பயந்து விட்டான். நான் சந்தேகப் பட்டது சரியாகப் போய் விட்டது. அங்கிருந்து நழுவப் பார்த்தான். விரட்டிச் சென்றேன். மெயின் ரோட்டை நோக்கி ஓடினான். நழுவ விட்டு விடக் கூடாது என்பதில் குறியாக இருந்தேன். மெயின் ரோடு திருப்பத்தில் திரும்பும் போது எதிரே வந்த லாரி அவன் மீது மோதியது. இரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தான். நான் அருகே சென்றேன். அவன் என்னை வெறித்து பார்த்தான்.
அந்த பார்வைக்கு அர்த்தம் எனக்கு மட்டும் தான் தெரியும். நேற்று இரவு இரண்டு மணியளவில் நான் பணி முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் தெரு கோடியில் அவளை பார்த்தேன். ஆசை என்னை உந்தித்தள்ள அவளை பிடித்து இழுத்தேன். அப்பொழுது அவள் எதிர்பாராத விதமாக கீழே விழ அங்கிருந்த கல் அவள் தலையை பதம் பார்த்தது. பின் அவள் எழவே இல்லை. உயிர் பிரிந்து விட்டது என தெரிந்ததும் அங்கிருந்து கிளம்பினேன். மாரிமுத்துவை பற்றி யோசிக்கவே இல்லை. காலையில் தான் ஞாபகம் வந்தது. அவனையும் எப்படியாவது முடித்து விட வேண்டும் என்று தான் இங்கே வந்தேன். நல்ல வேளை அவனாகவே விபத்தில் இறந்து விட்டான். இனி இந்த விஷயம் யாருக்கும் தெரியாது.

No comments:

Post a Comment

Awaiting for your Comments